ஷா ஆலம், பிப் 27- தினசரி தேவைகளுக்கு நீரை விவேகத்துடனும் சிக்கனமாகவும் பயன்படுத்தும்படி சிலாங்கூர் மக்களை மேன்மை தங்கிய சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.
சில தரப்பினர் மத்தியில் காணப்படும் குறைவான விழிப்புணர்வு காரணமாகக் குடியிருப்புகளுக்கான நீர் பயன்பாடு அதிகரித்து காணப்படுவதாகச் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.
மாநிலத்தில் நடப்பு நீர் கையிருப்பை அதிகரிப்பதற்கு ஏதுவாக அன்றாடத் தேவைகளுக்கு நீரை விவேகத்துடன் பயன்படுத்தும்படி மாநில மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
நீரை விவேகத்துடன் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு குறைவாக உள்ள காரணத்தால் குடியிருப்புகளுக்கான நீர் பயனீடு அதிகரித்து ஒருவரின் அன்றாட நீர் பயன்பாடு 215 லிட்டராக உள்ளது என்றார் அவர்.
மாநில அரசு தலைமையகத்தில் இன்று பதினைந்தாவது மாநில சட்டமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலம் போதுமான அளவு சுத்தமான நீர் விநியோகத்தைக் கொண்டிருப்பது குறித்து தாம் இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் சொன்னார்.
எனினும், வறட்சி போன்ற பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.




