புத்ராஜெயா, பிப் 27- எண்பத்தைந்து வயது மூதாட்டியைக் கற்பழித்து,
இயற்கைக்கு மாறாகப் பாலியல் வன்புணர்வு புரிந்து படுகொலை செய்த
குற்றத்திற்காக முன்னாள் லோரி உதவியாளர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட
மரணத் தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று
மறுவுறுதிப்படுத்தியது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26ஆம் தேதி ஷா ஆலம் உயர்
நீதிமன்றம் தனக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி
கே.சத்தியராஜ் (வயது 31) என்ற அந்த ஆடவர் செய்த மேல் முறையீட்டு
மனுவை டத்தோ ஹடாரியா சைட் இஸ்மாயில தலைமையிலான
மூவரடங்கிய கூட்டரசு நீதிபதிகள் அடங்கிய குழு ஏகமனதாகத் தள்ளுபடி
செய்தது.
மனுதாரரின் முறையீட்டில் எந்த முகாந்திரமும் இருப்பதை நாங்கள்
காணவில்லை. அவருக்கு எதிரான குற்றத் தீர்ப்பு பாதுகாப்பானது. மரண
தண்டனை விதிப்பதற்கு மிகவும் பொருத்தமான வழக்கு இதுவாகும்.
ஆகவே, உயர் நீதிமன்றம் வழங்கிய குற்றத் தீர்ப்பையும் தண்டனையையும் நாங்கள் நிலைநிறுத்துவதோடு மேல் முறையீட்டையும் தள்ளுபடி செய்கிறோம் என்று டத்தோ அஸ்மான் அப்துல்லா மற்றும் டத்தோ எஸ்.எம். கோமதி சுப்பையாவுடன் இந்த வழக்கை நடத்திய டத்தோ ஹடாரியா குறிப்பிட்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி காலை 11.40 மணிக்கும்
பிற்பகல் 1.00 மணிக்கும் இடையே கம்போங் தாசேக் தம்பாஹானில் உள்ள
அடுக்குமாடி வீடொன்றில் இக்குற்றத்தைப் புரிந்ததாக சத்தியராஜ் மீது
குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை வழங்க
வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர்
குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.




