கோத்தா பாரு, பிப் 27- வெப்பக் காலத்தின் போது திறந்தவெளி தீயிடல்
சம்பவங்கள் நிகழும் பட்சத்தில் ஐந்து மாநிலங்களில் உள்ள
மேம்படுத்தப்பட்ட 201,000 ஹெக்டர் சதுப்பு நிலப்பகுதியில் காட்டுத் தீ
ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதை தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறை கண்டறிந்துள்ளது.
சிலாங்கூர், ஜோகூர், சரவா, பகாங் (ரொம்பின், பெக்கான் மற்றும்
குவாந்தான்), மற்றும் சபா (சிபித்தாங், பியூபோர்ட்) ஆகியவையே அந்த
ஐந்து மாநிலங்களாகும் என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது கூறினார்.
காட்டுத் தீ ஏற்படும் பட்சத்தில் அதனைக் கையாளும் முயற்சியின் ஒரு
பகுதியாக வடிகால் மற்றும் நீர் பாசனத்துறை, சுற்றுச்சூழல் துறை,
கனிமவளம் மற்றும் புவி அறிவியில் துறை ஆகியவற்றுடன் தீயணைப்புத்
துறை ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி வருவதாக அவர் சொன்னார்.
சதுப்பு நிலப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி தங்கள்
உறுப்பினர்களை கேட்டுக் கொண்டுள்ளதோடு அப்பகுதிகளில் நீர் மட்டம்
நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருப்பதை உறுதி செய்யும்படி மாவட்ட
அலுவலகத்தின் கண்காணிப்பில் உள்ள தோட்டங்களின் பொறுப்பாளர்களை
தாங்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிளந்தான் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் ஏற்பாட்டில்
நேற்றிரவு இங்கு நடைபெற்ற 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த பணியாளர்
விருது வழங்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கியப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
நாட்டில் நிகழும் தீ விபத்துகள் தொடர்பான தரவுகளைப் பார்க்கையில் கடந்த
2022ஆம் ஆண்டு 692ஆக இருந்த காட்டுத் தீச்சம்பவங்களின் எண்ணிக்கை
கடந்தாண்டு 1,291ஆக் உயர்வு கண்டது என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கடந்தாண்டு முழுவதும் தீயணைப்பு அதிகாரிகள்,
உறுப்பினர்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட 80 குற்றவியல்
உள்ளிட்ட புகார்கள் கிடைக்கப்பெற்றதாக அவர் சொன்னார்.




