ஷா ஆலம், பிப் 27- சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டம் உயர்நெறி மற்றும் பொறுப்புடன் நடைபெறுவதோடு மக்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கும் என்று தாம் நம்புவதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் கூறினார்.
விவாதங்கள் சூழல் இணக்கமான சூழலிலும் நியாயமான முறையிலும் இருக்க வேண்டும் என்பதோடு அவதூறுகளை பரப்புவதற்கும் உணர்ச்சிகரமான விஷயங்கள் மற்றும் போலிச் செய்திகளை பெரிதுபடுத்துவதற்கும் ஒரு களமாக பயன்படுத்தக்கூடாது என்று சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ், தெரிவித்தார்.
நியாயமான முறையிலும் ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும் மக்களுக்கும் மாநிலத்திற்கும் நன்மை பயக்கும் விஷயங்களை தங்கள் விவாதங்களில் மையப்படுத்தவும் வேண்டுமாய் சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.
இன்று இங்கு 15வது சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் மேன்மை தங்கிய சுல்தான் இவ்வாறு தெரிவித்தார்.
நமக்கு கிடைத்துள்ள அமைதி, சுபிட்சம் மற்றும் பாதுகாப்புக்காக நன்றி தெரிவிக்கும் அதேவேளையில் சிறந்த ஒற்றுமை உணர்வை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்றும் மாநில மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
நம்மிடம் இருக்கும் குறைபாடுகளை சரிசெய்ய முயற்சிப்போம். சர்ச்சைகளில்ருந்து விலகியிருப்போம். தீங்கு விளைவிக்கும் அனைத்து செயல்களையும் குறிப்பாக ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தைத் தவிர்ப்போம் என்று அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.




