புக்கிட் மெர்தாஜம், பிப் 27- ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளான
ஐந்து மோட்டார் சைக்கிள்களை டிரெய்லர் லோரி ஒன்று மோதியது.
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 132.4 கிலோ மீட்டரில் தெற்கு நோக்கிச்
செல்லும் தடத்தில் நேற்று அதிகாலை நிகழ்ந்த இவ்விபத்தில் அந்த ஐந்து
மோட்டார் சைக்கிளோட்டிகளும் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர்.
நேற்று அதிகால 4.00 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 19 முதல் 34
வயது வரையிலான ஐந்து உள்நாட்டினர் சம்பந்தப்பட்டுள்ளது தொடக்கக்
கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகச் செபராங் பிறை தெங்கா
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸ் கூறினார்.
அந்த நெடுஞ்சாலையில் நிகழ்ந்த டிரெய்லர் லோரி மற்றும் சில மோட்டார்
சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்து தொடர்பான 14 வினாடி காணொளி
சமூக ஊடங்களில் பகிரப்பட்டுள்ளது நேற்று காலை 11.00 மணியளவில்
தங்கள் கவனத்திற்கு வந்ததாக அவர் சொன்னார்.
அந்த நெடுஞ்சாலையில் பயணித்த ஐந்து மோட்டார் சைக்கிள்
ஒன்றோடொன்று உரசி விபத்துக்குள்ளான வேளையில் பின்னால் வந்து
கொண்டிருந்த டிரெய்லர் லோரி கட்டுப்படுத்த முடியாமல் அவற்றை
மோதியது என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர்
தெரிவித்தார்.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஐந்து மோட்டார் சைக்கிளோட்டிகளும்
லோசான காயங்களுக்குள்ளானதாக அவர் சொன்னார்.
இந்த சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிளோட்டிகளும் டிரெய்லர்
ஓட்டுநரும் இதுவரை போலீசில் புகார் செய்யவில்லை என்றும் அவர்
குறிப்பிட்டார்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 43(1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக
அவர் மேலும் கூறினார்.




