ஷா ஆலம், பிப் 26 - நாட்டின் நல்லிணக்கத்தைப் பேணும் அதேவேளையில் ஆட்சியாளர்கள், இனம் மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தொட வேண்டாம் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் நினைவூட்டினார்.
கூட்டரசு அரசியலமைப்பு இஸ்லாத்தை அதிகாரப்பூர்வ மதமாக அங்கீகரித்துள்ளதோடு அது தொடர்ந்து பாதுகாக்கப்படும். அதே சமயம் மற்ற மதத்தினர் முஸ்லிம்களிடம் பரப்பாமல் தங்கள் மதங்களை அமைதியான முறையில் பின்பற்ற முடியும் என்று சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.
எனவே, எந்தவொரு தரப்பினரும் இந்த அரசியலமைப்பின் அடிப்படையை ஆட்டங்காணச் செய்யவோ அல்லது அரசியலாக்கவோ முயற்சிக்கக் கூடாது என்று இன்று 15வது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணையின் முதல் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மாமன்னர் கூறினார்.
மக்களிடையே நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் வலுப்படுத்தும் கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
மலேசியா உருவாகி 60 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இனங்களுக்கிடையேயான ஒற்றுமை இன்னும் முழுமையடையவில்லை என்பதை நான் கவனித்தேன், ஏனென்றால் தேசிய மொழியில் தேர்ச்சி பெறவும் பிற இனங்களின் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளவும் தவறிய ஒரு தலைமுறை இன்றும் உள்ளது.
ஒருவரையொருவர் புரிந்துகொண்டு ஒற்றுமையான எதிர்கால தலைமுறையை உருவாக்க விரும்பினால் அதற்காக குழந்தை பருவத்திலிருந்தே அவர்களை வடிவமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ஆகவே, எனது வலது பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் அல்லது எனது இடது பக்கத்தில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து தரப்பினரையும் நான் அழைக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, கைகோர்த்து, அனைத்து மக்களின் நலனுக்காக நாட்டை மேம்படுத்தப் பாடுபடுவோம் என்று அவர் கூறினார்.




