NATIONAL

பண்டார் சவுஜானா புத்ரா மேம்பாலம் 95% பூர்த்தி- மே மாதம் போக்குவரத்துக்குத் திறக்கப்படும்

26 பிப்ரவரி 2024, 9:33 AM
பண்டார் சவுஜானா புத்ரா மேம்பாலம் 95% பூர்த்தி- மே மாதம் போக்குவரத்துக்குத் திறக்கப்படும்

கோல லங்காட், பிப் 26 - போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில்

நிர்மாணிக்கப்பட்டு வரும் 850 மீட்டர் நீளம் கொண்ட பண்டார் சவுஜானா

புத்ரா மேம்பாலம் வரும் மே மாதம் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என

எதிர்பார்க்கப்படுவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு

உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் மத்திய பகுதி (இலிட்) மற்றும் தென்

கிள்ளான் விரைவுச் சாலை (என்.கே.வி.இ.) ஆகியவற்றை இணைக்கும்

இந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது 95 விழுக்காடு

பூர்த்தியடைந்துள்ளதாக அவர் சொன்னார்.

அந்த மேம்பாலத்தில் தற்போது மின்சார இணைப்பு மற்றும் தார் போடும்

பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முற்றுப்

பெற்றவுடன் தர நிர்ணயச் சோதனைப் பணிகள் ஒரு மாதக் காலத்திற்கு

மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக்

கட்டுப்பாட்டு ஆணை, தொழிலாளர் பற்றாக்குறை, மேம்பால

வடிவமைப்பில் மாற்றம் மற்றும் மின்சார கேபிள்கள், குடிநீர்க் குழாய்கள்

உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இடம் மாற்றம் செய்யும் பணி

ஆகியவை காரணமாக இந்த பால கட்டுமானத் திட்டத்தில் சிறிது கால

தாமதம் ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.

சுமார் 5 கோடியே 30 லட்சம் வெள்ளி செலவிலான இந்த மேம்பாலம்

வரும் மே மாதம் போக்குவரத்துக்குத் திறக்கப்படும். போக்குவரத்தை

பரவலாக்கவும் பண்டார் சவுஜானா புத்ரா சந்திப்பில் வாகன நெரிசலைக்

குறைக்கவும் இந்த மேம்பாலம் பெரிதும் துணை புரியும் என்றார் அவர்.

இன்று பண்டார் சவுஜானா புத்ரா மேம்பால கட்டுமானப் பகுதிக்கு வருகை

புரிந்து திட்ட மேம்பாடுகளை நேரில் ஆய்வு செய்தப் பின்னர்

செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, புதிய வீடமைப்பு பகுதிகளையும் நெடுஞ்சாலைகளையும்

இணைக்கும் சாலைகளை அமைப்பது தொடர்பில் தாங்கள் மலேசிய

நெடுஞ்சாலை வாரியத்துடன் (எல்.எல்.எம்.) பேச்சு நடத்தவுள்ளதாகவும்

இஷாம் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.