ஜோகூர் பாரு, பிப் 26: சமீபத்தில் ஜோகூர் ஜெயாவில் உள்ள வீடு ஒன்றில் வளர்ப்பு நாயை துஷ்பிரயோகம் செய்து வைரலான சம்பவத்தை விசாரிக்க உதவுவதற்காக ஒரு ஆணின் சாட்சியத்தை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.
கடந்த வியாழன் இரவு 9.30 மணியளவில் நடந்த இச்சம்பவம் தொடர்பான புகாரை ஒரு நபரிடமிருந்து பெற்றதைத் தொடர்ந்து தனது தரப்பு வழக்கை மேலும் விசாரித்து வருவதாக ஶ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் சோஹைமி இஷாக் கூறினார்.
"49 வயதான உள்ளூர் பெண்மணியான புகார்தாரர், குறிப்பிட்ட ஆணின் செயல்களைப் பார்த்ததாகக் கூறினார்.
“வீடியோவில் உள்ள ஆணின் வாக்கு மூலத்தைக் காவல்துறையினர் எடுத்துள்ளனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டப் பிரிவு 428, விலங்குகள் நலச் சட்டம் 2015 இன் பிரிவு 29(1)(a) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாக முகமட் சொஹைமி கூறினார்.
மேலும், செல்லப்பிராணிகளைத் தவறாக நடத்த வேண்டாம் என்றும், விலங்குகளின் பாதுகாப்பு குறித்த அறிவையும் விழிப்புணர்வையும் அதிகரிக்கவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, மலேசியன் டாக்ஸ் டிசர்வ் பெட்டர் முகநூல் பக்கத்தில் 29 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலானது. இதில் ஒரு நபர் தனது செல்ல நாயை தடியால் அடித்தது பதிவாகியிருந்தது.
- பெர்னாமா




