கோலாலம்பூர், பிப் 26 - பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் மூன்றாம்
தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரை மாட்சிமை தங்கிய பேரரசர்
சுல்தான் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இந்த சிறப்பு நிகழ்வில் மாட்சிமை தங்கிய பேரரசியார் ராஜா ஸரித்
சோஃபியாவும் கலந்து கொண்டார்.
இன்று காலை 10.00 மணியளவில் நாடாளுமன்றச் சதுக்கம் வந்தடைந்த
பேரரசர் தம்பதியரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும்
அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான்
இஸ்மாயில் வரவேற்றனர்.
துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிம் ஹமிடி,
டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசுப், மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி
அப்துல், மேலவை சபாநாயகர் டத்தோ முத்தாங் தாகால் ஆகியோரும்
இந்த வரவேற்புச் சடங்கில் கலந்து கொண்டனர்.
நாட்டின் 17வது பேரரசராக கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி
பதவியேற்றப் பின்னர் சுல்தான் இப்ராஹிம் தலைமையேற்கும் முதலாவது
நாடாளுமன்றக் கூட்டத் தொடராக இது விளங்குகிறது.
நாடாளுமன்றச் சதுக்கத்தில், கோலாலம்பூர், சுங்கை பீசி கேம் பெர்டானா,
அரச மலாய் இராணுவப் படையின் முதலாவது பட்டாளத்தின்
உறுப்பினர்கள் வழங்கிய முதன்மை மரியாதை அணிவகுப்பைப் பேரரசர்
தம்பதியர் ஏற்றுக் கொண்டனர்.
தேசிய கீதமும் அதனைத் தொடர்ந்து அரச மலாய் இராணுவத்தின்
இசையும் இசைக்கப்பட்டன. சுங்கை பூலோ முகாமின் அரச (சடங்கு)
41வது அரச பீரங்கிப் படை பிரிவின் 21 மரியாதை குண்டு முழக்கமும்
இடம் பெற்றது.
மாமன்னர் தம்பதியர் கலந்து கொண்ட இந்த நாடாளுமன்றக் கூட்டத்
தொடரின் தொட்டக்க நிகழ்வு தொலைக்காட்சி மற்றும் இணைய
ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இந்த மக்களவைக் கூட்டத் தொடர் 19 நாட்களுக்கு நடைபெறும் என
நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் குறிப்பிடப்படுள்ளது.
வரும் பிப்ரவரி 27 முத மார்ச் 7 வரை பேரரசரின் உரை மீதான
விவாதமும் அதனைத் தொடர்ந்து மார்ச் 11 வரை அமைச்சுகளின் பதில்
அங்கமும் இடம் பெறும்.
மேலவைக் கூட்டத் தொடர் மார்ச் 18ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 வரை
நடைபெறும்.




