காஸா, பிப் 26 - காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் ஏழு
பாலஸ்தீனக் குடும்பங்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர்
கொன்றுள்ளனர். இந்த தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டதோடு மேலும்
131 பேர் காயமுற்றதாக மருத்துவ வட்டாரங்கள் கூறின.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் நடத்தி வரும்
இத்தாக்குதலில் இதுவரை 29,692 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு
காயமுற்றவர்கள் எண்ணிக்கை 69,879ஆக உயர்வு கண்டுள்ளதாகக்
காஸாவிலுள்ள மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் பொது மக்கள் மற்றும் மருத்துவக்
குழுவினரை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில்
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் மற்றும் சாலையில் கிடக்கும்
இறந்தவர்களின் உடல்களை மீட்பதில் ஆம்புலன்ஸ் வாகனங்களும்
மீட்புக்குழுவினரும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இஸ்ரேலின் இந்த கோரத் தாக்குதல்கள் காரணமாக ஆக்கிரமிக்கப்பட்ட 85
விழுக்காட்டுப் பகுதிகளில் உள்ள மக்கள் கட்டாய இடப் பெயர்வுக்கு
ஆளாகியுள்ளதோடு சுத்தமான நீர், மருந்து மற்று உணவுப்
பற்றாக்குறையினால் அவதியுறுகின்றனர்.
இந்த தாக்குதல்கள் காரணமாகக் காஸாவின் 60 விழுக்காட்டுப் பகுதிகளில்
உள்ள குடியிருப்புகள் நிர்மூலமாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை
கூறியது.




