பெட்டாலிங் ஜெயா, பிப் 22- பருவநிலை மாற்றத்தின் விளைவாக உணவுப்
பற்றாக்குறைப் பிரச்சனையினால் மக்கள் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி
செய்ய உணவு உத்தரவாதத்தை உறுதி செய்வதற்கான முயற்சியில்
மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.
ஆறு மாதங்கள் வரை தேவைப்படும் உணவைத் சேகரித்து வைப்பதற்கு
ஏதுவாக 5 கோடி முதல் 6 கோடி வெள்ளி செலவில் உணவுக்
கையிருப்புத் திட்டத்தை மாநில அரசு இவ்வாண்டில்
அமல்படுத்தவுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.
பருவ நிலை மாற்றம் என்பது பேரிடருடன் மட்டும் தொடர்புடையது
அல்ல. மாறாக, உணவு விநியோகம் உள்ளிட்ட மற்ற விஷயங்களையும்
அது உள்ளடக்கியுள்ளது. கடுமையான பருவநிலை மாற்றம் உலகம்
முழுவதும் உணவு உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று
அவர் குறிப்பிட்டார்.
முன்பு உணவு சுழற்சி என்பது ஒரு பிரச்சனைக்குரிய விஷயமாக
இருந்ததில்லை. முன்பு ஏற்பட்ட அரிசி மற்றும் கோழி பற்றாக்குறையைக்
கருத்தில் கொண்டு உணவுப் பொருள்களை கூடுதலாகக் கையிருப்பில்
வைக்க வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள பி.ஜே. லைப் ஆர்ட்சில் புத்தக வெளியீட்டு நிகழ்வுக்குத்
தலைமை தாங்கி உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா
ஜமாலுடினும் கலந்து கொண்டார்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்
என்பதால் உணவுப் பற்றாக்குறைப் பிரச்சனையைச் சாதாரணமாகக் கருத
முடியாது என்றும் அமிருடின் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் குறிப்பாக மலிவு விலை வீடமைப்புப் பகுதிகளில்
வசிக்கும் சிறார்கள் ஊட்டச்சத்துணவு பிரச்சனையை எதிர் கொள்வதாக
கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.




