குவாந்தான், பிப் 22- சீனப்புத்தாண்டு மற்றும் பள்ளி விடுமுறையை
முன்னிட்டு இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கி மேற்கொள்ளப்பட்ட சிறப்புச்
சோதனை நடவடிக்கையின் போது 14 பேருந்து ஓட்டுநர்கள் தடை
செய்யப்பட்ட போதை வஸ்துகளைப் பயன்படுத்தியது கண்டு
பிடிக்கப்பட்டது.
பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்குத் தங்கள் பயணத்தை
மேற்கொள்ளவிருந்த அந்த பேருந்து ஓட்டுநர்கள் மீது இதர அரசு
நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட சோதனையில்
சம்பந்தப்பட்ட அவர்கள் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகளைப்
பயன்படுத்தியிருந்தது கண்டறியப்பட்டது என்று சாலை போக்குவரத்து
துறையின் (ஜே.பி.ஜே.) மூத்த அமலாக்க இயக்குநர் டத்தோ லோக்மான்
ஜமான் கூறினார்.
அவர்கள் அனைவரும் உள்நாட்டினராவர். அவர்கள் ஷாபு,
மெத்தம்பெத்தமின், கஞ்சா போன்ற போதைப் பொருள்களைப்
பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. சுறுசுறுப்பாகவும் நீண்ட
பயணத்தின் போது விழப்புடன் இருக்கவும் இந்த போதைப் பொருள்களை
அவர்கள் பயன்படுத்தியுள்ளனர் என நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
எனினும், இத்தகைய போதைப் பொருள்களின் பயன்பாட்டினால்
ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை
விளைவிக்கும் என்று அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள கம்பாங்கில் மேற்கொள்ளப்பட்ட 2024 சீனப்புத்தாண்டு
சிறப்பு சோதனை நடவடிக்கைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் பகாங் மாநில ஜே.பி.ஜே.
இயக்குநர் கமாருள் இஸ்கந்தார் நோர்டினும் கலந்து கொண்டார்.
பேருந்து ஓட்டுநர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில்
சம்பந்தப்பட்ட பஸ் நிறுவனங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய
லோக்மான், இதன் தொடர்பான விசாரணை முடிவுகள் மேல்
நடவடிக்கைக்காகத் தரை போக்குவரத்து நிறுவனத்திடம் (அபாட்)
ஒப்படைக்கப்படும் என்றார்.




