ஷா ஆலம், பிப் 22- தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள
சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் மையங்கள் தொடர்பான பிரச்சினைக்கு
உடனடித் தீர்வு காணும்படி ஊராட்சி மன்றங்களுக்கு மாநில அரசு
உத்தரவிட்டுள்ளது.
கிள்ளான், கோம்பாக், செர்டாங் உள்பட மாநிலத்தின் அனைத்துப்
பகுதிகளிலும் 100க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குப்பைக் கொட்டும்
மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்றங்கள் மற்றும்
சுற்றுலா துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம்
கூறினார்.
இத்தகைய இடங்கள் மீது தொடர்ந்தாற்போல் சோதனை மேற்கொண்டு
வரும் அதே வேளையில் அவசியம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக
நடவடிக்கை எடுத்து இப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வைக் காணும்படி
ஊராட்சி மன்றங்களை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று அவர்
குறிப்பிட்டார்.
அதே சமயம், ஊராட்சி மன்றங்களில் பதிவு செய்யாத குத்தகையாளர்களை
பணியில் அமர்த்த வேண்டாம் என்று சம்பந்தப்பட்டத் தரப்பினரை
குறிப்பாக நடத்துநர்களை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம் என்று
சிலாங்கூர்கினிக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னார்.
குற்றம் புரிவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக
ஊராட்சி மன்றச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய மாநில அரசு
உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக அவர், கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட்,
கிள்ளான் அரச மாநகர் மன்றம், சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம்
ஆகிய தரப்பினருடன் இணைந்து காப்பார், சுங்கை செர்டாங்கில் செயல்பட்டு வரும் சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் மையம் திடீர் சோதனை நடத்தினார்.
இந்த சோதனை குறித்து கருத்துரைத்த அவர், இப்பகுதியில் இதுவரை
லோரிகள் பறிமுதல் தவிர்த்து ஆறு முறை அதிரடிச் சோதனை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 700 டன் எடையுள்ள கேபிள்கள், பிளாஸ்டிக்
பொருள்கள் உள்ளிட்ட கழிவுகள் இப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளன
என்று அவர் மேலும் கூறினார்.




