மலாக்கா, பிப் 21- காலனித்துவ காலத்தில் இந்நாட்டில் இருந்த அதிகாரிகள்
போல் பேராசை கொண்டவர்களாகவும் அகந்தைமிக்கவர்களாகவும்
இன்றையத் தலைவர்கள் இருக்கக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
மலேசிய சிறந்த நிலையை அடைவதை உறுதி செய்வதில் உண்மையில்
ஆர்வமுடையவர்களாக இருந்தால் இத்தகைய மனப்போக்கை அவர்கள்
கொண்டிருக்கக் கூடாது என்று அவர் சொன்னார்.
நாடு சுதந்திரம் அடைவதற்காக தங்கள் உயிரையும் உடமைகளையம்
தியாகம் செய்யத் தயாராக இருந்த மகத்தான தலைவர்கள் இல்லாவிடில்
சுதந்திரத்தால் கிடைத்த அனுகூலங்களை இப்போது நாம் அனுபவித்துக்
கொண்டிருக்க முடியாது என்று அவர் கூறினார்.
காலனித்துவ அதிகாரிகளின் ஆணவ மற்றும் பேராசை அணுகுமுறையின்
பால் ஈர்க்கப்படாமல் நமது முந்தைய தலைவர்களின் நல்ல,
நேர்மறையான மற்றும் குணாதியசங்களை கற்றுக் கொள்ள வேண்டும்
என்ற பாடத்தை நடப்புத் தலைவர்களுக்கு இது உணர்த்துகிறது என்றும்
அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு இங்கு நடைபெற்ற மலாயா கூட்டமைப்பின் 68வது
பிரகடனத்தின் நிறைவு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு
உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் தலைவர்களின் சேவைகளை நினைவுக்கூறும் விதமாக அடுத்த
தலைமுறைத் தலைவர்கள் நாட்டின் கௌரவத்தை மேலும் உயரிய
நிலைக்கு கொண்டுச் செல்வதில் முனைப்பு காட்ட வேண்டும் என பிரதமர்
கேட்டுக் கொண்டார்.
நாட்டின் கௌரவத்தை உயர்த்துவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும்
அடுத்த தலைமுறை செய்ய வேண்டும். மக்களின் வாழ்க்கை மேலும் சௌகர்யமானதாக இருப்பதை உறுதி செய்ய பொருளாதாரத்தை உயர்த்துவது, கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவது சுற்றுலா மற்றும் தொழில் வாய்ப்புகளை ஈரப்பது ஆகியவற்றில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.




