புத்ராஜெயா, பிப் 20 - மலேசிய ஊடக மன்ற (எம்.எம்.சி.) நகல் மசோதாவைத் தயாரிக்கும் இறுதிக் கட்டக் பணியில் தகவல் தொடர்பு அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அதன் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
சட்டத் துறைத் தலைவருடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளதோடு அமைச்சரவையிலும் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த மன்றத்தை அமைப்பதற்கான நடைமுறை சிறிது கால அவகாசம் பிடிக்கும் என்று அவர் விளக்கினார்.
மலேசிய ஊடக மன்றத்தை அமைக்கும் திட்டம் நிறைவேறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று இன்று இங்கு பத்திரிகையாளர்களுக்கான மலேசிய நெறிமுறைக் கோட்பாட்டை அறிமுப்படுந்தும் விழாவில் அவர் கூறினார்.
நாட்டில் பத்திரிகை சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக மலேசிய ஊடக மன்ற உருவாக்கம் உட்பட பல ஊடகங்கள் தொடர்பான மசோதாக்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஃபாஹ்மி முன்னதாக தெரிவித்திருந்தார்.
நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ஃபாஹ்மி, இந்த தரப்பினருக்குப் பயனளிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தும்படி தகவல் இலாகாவுக்கு உத்தரவிட்டார்.
பகுதி நேர பத்திரிகையாளர்களின் நலன் குறிப்பாக ஊழியர் சேமநிதி (இ.பி.எப்.) மற்றும் சமூக பாதுகாப்பு நிறுவனம் (சொக்சோ) மூலம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங்குடன் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டது என்றார் அவர்.
நாட்டில் ஊடக அங்கீகார அட்டை பெற்ற 9,750 ஊடகவிரலாளர்கள் உள்ள வேளையில் அவர்களில் சுமார் 6,000 க்கும் மேற்பட்டோர் பகுதி நேரப் பத்திரிகையாளர்களாவர்.




