சிரம்பான், பிப்.20 - நீலாய், லெங்கெங்கில் உள்ள ஒரு வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி மற்றும் இரு மகள்களின் சடலங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைக்காகத் தொழில்நுட்பராக வேலை செய்யும் 30 வயது மதிக்கத்தக்க நபரை போலீஸார் கைது செய்தனர்.
மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பில் போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 1.00 மணியளவில் சம்பந்தப்பட்ட அந் நபர் கைது செய்யப்பட்டதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹாஷிம் தெரிவித்தார்.
குடியிருப்புப் பகுதியில் ஒரு பெண்ணும் இரண்டு பிள்ளைகளும் இறந்து கிடப்பதாக நேற்று இரவு 9.25 மணியளவில் லெங்கெங் காவல் நிலையத்திற்கு ஒரு நபரிடமிருந்து அழைப்பு வந்தது.
34 வயதுடைய பெண்ணும், ஆறு மற்றும் மூன்று வயதுடைய இரண்டு பிள்ளைகளும் வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது சோதனையில் தெரியவந்தது அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதமும் கண்டெடுக்கப்பட்டது.
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காகச் சிரம்பான் துவாங்கு ஜாபர் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கொலைக் குற்றம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவ அந்த ஆடவர் இன்று தொடங்கி நான்கு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.




