புத்ராஜெயா, பிப் 20 - ஊடக நிறுவனங்கள் பணியின் போது கடைப்பிடிக்க
வேண்டிய விதிமுறைகளை உள்ளடக்கிய ஊடகவியலாளர்களுக்கான
மலேசிய நெறிமுறை கோட்பாடுகளை அரசாங்கம் இன்று
அறிமுகப்படுத்தியது.
செய்திக்கான மூலங்கள் மற்றும் தகவல்கள் மீது மக்கள் நம்பிக்கைக்
கொள்ளும் வகையில் தொழில்நிபுணத்துவம் மற்றும் உயர்நெறியை இந்த
கோட்பாடு வலியுறுத்துகிறது.
தகவல் இலாகா வாயிலாக தொலைத் தொடர்பு அமைச்சு வரைந்துள்ள
இந்த நன்னெறிக் கோட்பாட்டை தொலைத் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி
ஃபாட்சில் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியீடு செய்தார். இந்த நன்னெறிக்
கோட்பாடு பத்திரிகையாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் பொறுப்புகள் மற்றும்
தர நிலைகளை அடிக்கோடிட்டு காட்டும் எட்டு அடிப்படை நெறிமுறைக்
கூறுகளை கொண்டுள்ளது.
பல்லின மக்கள் கொண்ட நாட்டின் குரலாக ஒலிப்பது, வெளிப்படைத்
தன்மை மற்றும் உயர் நெறியைக் கொண்டிருப்பது, தகவல்களை
வழங்குவதில் நேர்மையாக நடந்து கொள்வது, தகவல்களின் உண்மை
மற்றும் துல்லியத்தை உறுதி செய்வது, சுய நலத்திலிருந்து
விலகியிருப்பது, தனியுரிமை மற்றும் இரகசியத்தைக் காப்பது,
தொழில்சார்ந்த சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அறிந்திருப்பது,
தொடர்ச்சியாக ஊடகவியல் திறன்களை அதிகரிப்பது ஆகியவை அந்த
அடிப்படை நெறிமுறைகளாகும்.
ஊடகவியலாளர்களுக்கு ஊடக அடையாள அட்டைகளை வழங்குவதில்
இந்த உயர் நெறிக் கோட்பாடு ஒரு வழிகாட்டியாக கொள்ளப்படும என்று
அதை அறிமுகம் செய்யப்படுவதை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் தகவல் இலாகா கூறியது.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடங்கி அதிகாரப்பூர்வ
நிகழ்வுகள் வரை ஊடகவியலாளர்களின் அதிகாரப்பூர்வ அடையாள
ஆவணமாக இந்த அடையாள அட்டை விளங்குகிறது.




