கோலாலம்பூர், பிப் 19 - அடுத்தாண்டு மேற்கொள்ளப்படவிருக்கும் 2025
சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டை முன்னிட்டு சூழலியல்
சுற்றுலாவை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் வாயிலாக 70
லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை ஈர்க்க மாநில
அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு சுற்றுலா தொழில் துறை வாயிலாகச் சேவைத்
துறைக்கு மிக அதிகமாக அதாவது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 26.5
விழுக்காட்டு பங்களிப்பைச் சிலாங்கூர் வழங்கியதன் அடிப்படையில் இந்த
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்றங்கள் மற்றும் சுற்றுலாத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
கடந்த 2023ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட 50 லட்சம் சுற்றுப்பயணிகள்
இலக்கைத் தாண்டி 65 லட்சத்து 40 ஆயிரம் சுற்றுப்பயணிகளைச் சிலாங்கூர்
ஈர்த்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டில் மாநிலத்திற்கு வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 56
லட்சம் பேராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் 45 லட்சம்
பேர் உள்நாட்டியிலிருந்தும் எஞ்சியோர் வெளிநாடுகளிலிருந்தும் வருகை
புரிவர் என அவர் சொன்னார்.
தற்போது நான் சூழலியல் சுற்றுலாத் துறை மீது நான் கவனம்
செலுத்துகிறேன். மாநிலத்தின் வட மற்றும் தென் பகுதிகளில் சில
இடங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவை சுற்றுலாத்
தொகுப்பில் இடம் பெறுவதற்குரிய தகுதியைக் கொண்டுள்ளன என்றார்
அவர்.
கோல சிலாங்கூர் முதல் சபாக் பெர்ணம் வரையிலான வட பகுதியும்
சிப்பாங் மற்றும் கோல லங்காட்டை உள்ளடக்கிய தென் பகுதியும் அதில் அடங்கும் என்று பெர்னாமா வானொலியின் ‘தெமு புவால் ரேடியோ‘ எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கூடுதல் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதில் சிலாங்கூர் கூடுதல்
அனுகூலங்களைக் கொண்டுள்ளது. கோலாலம்பூர் அனைத்துலக விமான
நிலையம் 1 மற்றும் 2 ஆகியவற்றோடு சுபாங் விமான நிலையமும்
சிலாங்கூரில்தான் அமைந்துள்ளன.
சுற்றுப்பயணிகள் முதலில் சிலாங்கூரில் சுற்றுலா மேற்கொண்டப் பின்னர்
வேறு மாநிலங்களுக்குச் செல்வதை உறுதி செய்ய நாங்கள்
விரும்புகிறோம் என்று அவர் சொன்னார்.




