புத்ராஜெயா, பிப் 19 - பாரம்பரிய மற்றும் ஊட்டச்சத்து மருத்துவ துறை
(டி.சி.எம்.) சார்ந்தவர்கள் 2016ஆம் ஆண்டு டி. சி.எம். சட்டத்தில் (சட்டம் 775)
பதிவு செய்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எட்டு விழுக்காடு சேவை
வரியிலிருந்து விலக்களிக்கப்படும் என்று நிதியமைச்சு இன்று கூறியது.
சுகாதார அமைச்சின் கீழ் தங்களைப் பதிவு செய்துள்ள டி.சி.எம்.
நடத்துநர்களுக்கு இவ்வாண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி அமலுக்கு
வரவுள்ள சேவை வரியிலிருந்து விலக்களிக்கப்படும் என்று இரண்டாவது
நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா அஜிசான் பெர்னாமாவுக்கு அளித்த
சிறப்பு பேட்டியில் குறிப்பிட்டார்.
இந்த முடிவின் படி 2016ஆம் ஆண்டு டி.சி.எம். சட்டத்தின் கீழ் பதிவு
பெற்றுள்ள பாரம்பரிய மற்றும் ஊட்டச்சத்து மருந்துவ துறை சார்ந்தவர்கள்
மலேசிய சுங்கத் துறையில் தங்களைப் பதிவு செய்து கொள்ள
வேண்டியதில்லை என்று அவர் சொன்னார்.
மலாய் பாரம்பரிய மருத்துவம், சீன பாரம்பரிய மருத்துவம், இந்திய
பாரம்பரிய மருத்துவம் ஹோமியோபதி, கிரோப்ரெட்டிக், ஓஸ்தேபதி
மற்றும் இஸ்லாமிய மருத்துவ துறையினருக்குச் சேவை வரி
விதிக்கப்படாது என அவர் தெளிவுபடுத்தினார்.
இது தவிர டி.சி.எம். நடத்துநர்களால் நிர்வகிக்கப்படும் சட்டம் 775இன் கீழ்
பதிவு செய்யப்பட்ட மருத்துவ அல்லது நல்வாழ்வு மையங்கள், உடம்புபிடி
நிலையங்கள் ஆகியவற்றுக்கும் இந்த வரி விலக்களிப்பு பொருந்தும் என
அவர் குறிப்பிட்டார்.
டி.சி.எம். துறை சார்ந்தவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்
நிகழ்வுகளின் மூலம் கிடைத்த கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு
எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அதிகரிக்கும்
மடாணி அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாகப் பாரம்பரிய மற்றும்
ஊட்டச்சத்து மருத்துவ துறையினருக்கான இந்த வரி விலக்களிப்பு
விளங்குகிறது என மேலும் சொன்னார்.
மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கிலான இந்த முடிவுக்கு
பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல்
அளித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.




