தோக்கியோ, பிப் 19 - ஏழு நாள் பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டு
ஜப்பானுக்கு வருகை மேற்கொண்டுள்ள துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ
அகமது ஜாஹிட் ஹமிடியை சந்தித்து கலந்துரையாடுவதற்கான
வாய்ப்பினை அந்நாட்டிலுள்ள சுமார் 200 மலேசியர்கள் நேற்று பெற்றனர்.
இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற சீனப்புத்தாண்டு
கொண்டாட்டம் மற்றும் இரவு விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட
மாணவர்கள் மற்றும் அந்நாட்டில் தங்கி வேலை செய்யும் மலேசியர்கள்,
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி துணைப் பிரதமரிடம் பல்வேறு
கேள்விகளை முன்வைத்தனர்.
கொள்கை ஆய்வுக்கான தேசிய உயர்கல்விக் கழக (ஜி.ஆர்.ஐ.பி.எஸ்.)
மாணவரான முகமது ஃபாரிஸ் ஜாமில் நெறியாளராகப் பணியாற்றிய இந்த
கலந்துரையாடல் நிகழ்வில் திவேட் எனப்படும் தொழில்நுட்ப மற்றும்
தொழில்கல்வியின் கொள்கை, மலேசிய மருத்துவத் துறையின் மேம்பாடு,
ஹலால் தொழில் துறை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து
அவர்கள் கேள்வியெழுப்பினர்.
முன்னதாக தமதுரையில், நாட்டின் தயாரிப்பு பொருள்கள் மற்றும்
அவற்றின் தர அடையாளத்தை வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும்
வேலை செய்யும் மலேசியர்கள் பிரபலப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்
கொண்ட அவர், அது நமது கடமையும் ஆகும் என்றார்.
இதனால் நமக்கு எந்த வெகுமதியும் கிடைக்காவிட்டாலும் நமது தயாரிப்பு
பொருள்கள் அல்லது சேவையைப் பெருமையின் அடிப்படையில் நாம்
பிரபலபடுத்த வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, நேற்று பிற்பகல் அக்குவா சிட்டி ஓடாய்பா அருகிலுள்ள
உணவகம் ஒன்றில் 70 மாணவர்களுடன் ஜாஹிட் ஹமிடி சந்திப்பு
நடத்தினார்.
மடாணி அரசாங்கத்தின் கீழ் துணைப் பிரதமராகக் கடந்த 2022ஆம் ஆண்டு
நியமிக்கப்பட்டப் பின்னர் அவர் ஜப்பானுக்கு மேற்கொள்ளும் முதலாவது
அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும்.




