கோலாலம்பூர், பிப் 9 - சுங்க வரி செலுத்தப்படாதச் சிகிரெட் மற்றும்
மதுபானங்களைக் கடத்தும் கும்பலின் நடவடிக்கையை அரச மலேசிய
போலீஸ் படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை சரவா மாநிலத்தின் கூச்சிங்கில் மேற்கொள்ளப்பட்ட
மூன்று அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில் 9 கோடியே 80 லட்சம்
வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடல் போலீஸ், சரவா மாநில போலீஸ் தலைமையகம் உள்ளிட்ட
அமலாக்கத் தரப்பிரின் ஒத்துழைப்பு மற்றும் உளவுத் தகவலின்
அடிப்படையில் இந்த அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகப் புக்கிட்
அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின்
இயக்குநர் டத்தோஸ்ரீ ஹசானி கசாலி கூறினார்.
இந்த சோதனை நடவடிக்கையில் ஏழு உள்நாட்டு ஆண்கள் மற்றும் ஒரு
வெளிநாட்டுப் பெண் உள்பட எண்மர் கைது செய்யப்பட்டதோடு சுங்க வரி
செலுத்தப்படாத 4 கோடியே, 4 லட்சத்து 69 ஆயிரத்து 600 சிகிரெட்டுகளும்
44,716 பெட்டி மதுபானங்களும் கைப்பற்றப்பட்டன என்று அவர்
தெரிவித்தார்.
இரு வாகனங்கள் மற்றும் ஐந்து கைபேசிகளும் இந்த சோதனையின்
போது பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின்
மொத்த மதிப்பு 9 கோடியே 87 லட்சத்து 93ஆயிரத்து 958 வெள்ளி 58 காசு
ஆகும் என்றார் அவர்.
இந்த அதிரடிச் சோதனை தொடர்பில் 1967ஆம் ஆண்டு சுங்கத் துறைச்
சட்டம் மற்றும் 19590/63ஆம் அண்டு குடிநுழைவுச் சட்டத்தின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜனவரி 1 முதல் 7 வரையிலான காலக்கட்டத்தில் அரச
மலேசிய போலீஸ் படை 91 பேரைக் கைது செய்து சுங்க வரி செலுத்தப்படாத 18 கோடியே 10 லட்சம் வெள்ளி மதிப்பிலான மானிய விலை டீசல் மற்றும் வன விலங்குகள் பறிமுதல் செய்தது என்றார் அவர்.




