கோலாலம்பூர், பிப் 9- கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்களை போலீசார் கோல குபு பாரு, களும்பாங்கில் உள்ள கம்போங் கே.எல். டின் பகுதியில் கைது செய்தனர்.
கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யும் 43 மற்றும் 31 வயதுடைய அவ்விருவரையும் புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர் இரவு 8.20 மணியளவில் புரோட்டோன் சாகா கார் ஒன்றில் கைது செய்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது பைசால் தாஹ்ரிம் கூறினார்.
அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 6,276 கிராம் எடையுள்ள கஞ்சா என சந்தேகிக்கப்படும் கட்டிகளாக ஆக்கப்பட்ட காய்ந்த இலைகள் அடங்கிய ஏழு மஞ்சள் நிற பிளாஸ்டிக் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 22,000 வெள்ளியாகும் எனக் கூறிய அவர், இந்த போதைப் பொருள் உலு சிலாங்கூர் வட்டாரத்தில் விநியோகம் செய்யப்படவிருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது என்றார்.
இந்த போதைப் பொருளைக் கொண்டு 12,552 போதைப் பித்தர்களின் தேவையை ஈடு செய்ய முடியும் என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் போதைப் பழக்கம் உள்ளவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது, அவர்களில் ஒருவருக்குக் குற்றச் செயல் மற்றும் போதைப் பொருள் தொடர்பில் ஏழு முந்தைய குற்றப்பதிவுகளும் உள்ளன என்றார் அவர்.
1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரிப்பதற்கு ஏதுவாக கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று தொடங்கி ஒரு வார காலத்திற்கு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.




