ஈப்போ, பிப். 8: இன்று அதிகாலை தப்பாவில் உள்ள ஜாலான் பீடோர் லாமாவில் கார் தீப்பிடித்து எரிந்ததில் பெண் ஒருவர் உடல் கருகி இறந்தார் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் தீக்காயங்களுக்கு ஆளாகினர்.
இச்சம்பவம் குறித்து அதிகாலை 4.49 மணிக்கு தனது தரப்புக்கு அழைப்பு வந்ததாகவும், தாப்பா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) உறுப்பினர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்த தாகவும் பேராக் ஜேபிபிஎம் செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.
"மேலும், மற்றொரு பெண், ஐந்து மற்றும் எட்டு வயதுடைய இரண்டு சிறுவர்கள் தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காகத் தாப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்," என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
தீ முழுவதும் அணைப்பதற்கு தீயணைக்கும் வாகன தொட்டியிலிருந்து இரண்டு துணை நீர் மூலத்தைப் பயன்படுத்தியதாக சபரோட்ஸி கூறினார்.
உயிரிழந்தவரின் உடல் மேல் நடவடிக்கைகளுக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்க பட்டுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.
“இச்சம்பவத்தில் அடையாள ஆவணங்கள் எரிந்ததால் இதுவரை எங்களால் அவர்களின் உறவை உறுதிப்படுத்த முடியவில்லை,” என்றார்.
- பெர்னாமா




