சிப்பாங், பிப் 8- மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் (மாவ்கோம்)
மற்றும் மலேசிய சிவில் வான் போக்குவரத்து நிர்வாகம் (சி.ஏ.ஏ.எம்.)
ஆகியவற்றை இணைத்து ஒரே ஒழுங்கு முறை அமைப்பை உருவாக்கும்
பரிந்துரை இன்னும் விவாத நிலையில் உள்ளது.
இந்த விவகாரம் இவ்வாண்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது
தவணையின் போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சிபு
செல்லும் பாத்தேக் ஏர் விமானப் பயணிகளை வழியனுப்பும் நிகழ்வில்
கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இரண்டாம் தவணைக் கூட்டத் தொடர் இவ்வாண்டு
ஜூன் 24 முதல் ஜூலை 18 வரையிலும் மூன்றாம் கூட்டத் தொடர்
அக்டோபர் 7 முதல் டிசம்பர் 5 வரையிலும் நடைபெறும்.
மாவ்கோம் மற்றும் சி.ஏ.ஏ.எம்.மை இணைப்பது தொடர்பான பரிந்துரையை
லோக் கடந்த 2019ஆம் ஆண்டு முன்வைத்தார்.
மாவ்கோம் மற்றும் சி.ஏ.ஏ.எம். ஆகிய இரு ஒழுங்கு முறை
அமைப்புகளைக் கொண்ட சில நாடுகளில் மலேசியாவும் ஒன்றாக
விளங்குகிறது.
இதனிடையே, இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய
பாத்தேக் ஏர் விமான நிறுவன குழுமத்தின் வியூக இயக்குநர் டத்தோ
சந்திரன் ராம மூர்த்தி, இம்மாதம் 6ஆம் தேதி தொடங்கி
கோலாலம்பூருக்கும் சிபுவுக்கும் இடையே தினசரி இரு பயணச்
சேவைகளைப் பாத்தேக் ஏர் மேற்கொள்வதாகக் கூறினார்.
அதிகரித்து வரும் தேவை மற்றும் தீபகற்ப மலேசியாவுக்கும் கிழக்கு
மாநிலங்களுக்கும் இடையே விமானப் போக்குவரத்தை அதிகரிக்க
வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஏற்ப இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.




