லாபுவான், பிப் 8 - ஓய்வூதியம் இல்லாத 41,000 முன்னாள் இராணுவ
வீரர்களில் 26,000 பேர் வாழ்க்கைச் செலவினத் தொகையாக 300 வெள்ளி
பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த மாதாந்திர உதவித் தொகை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல்
அவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக மலேசிய ஆயுதப்படைகளின்
(ஏ.டி.எம்.) முன்னாள் இராணுவ வீரர்கள் விவகாரத் துறை தலைமை
இயக்குநர் மேஜர் ஜெனரல் ஜாம்பரி ஜெப்ரி டாருஸ் கூறினார்.
குறிப்பிட்ட விதிமுறைகளுகேற்ப அதாவது பரம ஏழைகள் மற்றும் மாதம்
1,169 வெள்ளி அல்லது அதற்கும் குறைவாக மாதம் வருமானம்
பெறுவோரை இலக்காக கொண்டு இந்த உதவித் தொகை
வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
முன்னாள் இராணுவ வீரர்களின் தேவைகளை ஈடு செய்ய வேண்டியதன்
அவசியத்தை முன்னாள் இராணுவ வீரர்கள் விவகாரத் துறை
உணர்ந்துள்ளது என்று இன்று இங்கு நடைபெற்ற முன்னாள் ஆயுதப்
படை வீரர்கள், உயிரிழந்த வீரர்களின் மனைவிகள் மற்றும் அவர்களின்
பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்வின் போது அவர்
இதனைத் தெரிவித்தார்.
ஓய்வூதியம் பெறாத அனைத்து 41,000 முன்னாள் இராணுவ வீரர்களுக்கும்
இந்த உதவித் தொகை கிடைப்பதை உறுதி செய்ய விதிமுறைகளைத்
தளர்த்துவது தொடர்பில் அரசாங்கத்துடன் தாங்கள் பேச்சு நடத்தி
வருவதாக அவர் மேலும் சொன்னார்.
ஓய்வூதியம் பெறாத 78,000 முன்னாள் இராணுவ வீரர்கள், உயிரிழந்த
வீரர்களின் மனைவிகள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ளவர்கள் உள்பட
மொத்தம் 168,000 ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் நாடு முழுவதும்
உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் இராணுவ வீரர்கள் விவகாரத் துறையின் சமூக நலத்
திட்டங்கள் வாயிலாக கடந்தாண்டு 33,042 முன்னாள் இராணுவ
வீரர்களுக்கு 6 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி
வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.




