கோலாலம்பூர், பிப் 8: இவ்வார இறுதியில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று தொடங்கி பிப்ரவரி 13 வரை நாடு முழுவதும் உள்ள கூட்டரசு சாலைகளின் வேக வரம்பு மணிக்கு 10 கிலோமீட்டர் குறைக்கப்படும்.
குறிப்பிட்ட காலகட்டத்தில், கூட்டரசு சாலைகளின் வேக வரம்பு மணிக்கு 90 கிமீ வேகத்திலிருந்து 80 கிமீ ஆக குறைக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சகம் (கேகேஆர்) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் அடிக்கடி நிகழும் விபத்துக்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் தற்காலிக வேக வரம்புக் குறைப்பும் ஒன்று என அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் 2024 சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மற்றும் சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தை அமைச்சகம் ஒரே நேரத்தில் மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசரகால பணிகள் தவிர குறிப்பிட்ட காலம் முழுவதும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் முக்கியமான சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் நிறுத்தப்படும்.
"இது குறிப்பாகச் கூட்டரசு சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து பொறுப்பேற்கும் வகையில் பொதுப்பணித்துறை அமைச்சால் தொடங்கப்பட்ட `MyJalan` திட்டத்திற்கு ஏற்ப உள்ளது" என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
– பெர்னாமா




