ஜோகூர் பாரு, பிப் 7- துப்புரவுப் பணியாளரான பெண்மணி ஒருவரை
மிரட்டிப் பணம் பறித்த புகார் தொடர்பில் ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ்
தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏழு இள
நிலை அதிகாரிகள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை இரவு 9.32 மணியளவில் கிடைத்த புகாரின் பேரில்
20 முதல் 50 வயது வரையிலான அந்த எண்மரும் கைது
செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் ஆணையர் எம்.
குமார் கூறினார்.
ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள்
தடுப்புப் பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் 32,000
வெள்ளியை மிரட்டிப் பறித்தது தொடர்பில் மாநில போலீஸ்
தலைமையகத்திற்குப் புகார் கிடைத்ததாக அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருவதாகக் கூறிய அவர், விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில்
இவ்விவகாரம் குறித்து ஆருடங்களை வெளியிட வேண்டாம் என பொது
மக்களைக் கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 384வது பிரிவின் கீழ்
அந்த எண்மரும் நான்கு நாட்களுக்கு விசாரணைக்காகத் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
அரச மலேசிய போலீஸ் படை மீதான மக்களின் நம்பிக்கையை
அதிகரிப்பதற்குக் காவல் துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள்
சம்பந்தப்பட்ட உயர்நெறி மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளைத்
தடுப்பதில் தமது தரப்பு முழு கடப்பாடு கொண்டுள்ளது என அவர் மேலும்
சொன்னார்.
போதைப் பொருள் வழக்கில் சம்பந்தப்பட்ட தன் சகோதரரை மீட்பதற்கு
40,000 வெள்ளியை வழங்கும்படி போலீஸ்காரர் ஒருவர் கேட்டதாக
துப்புரவுப் பணியாளரான பெண்மணி ஒருவர் புகார் செய்திருந்ததாகச் சமூக
ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு வந்து 35,000
வெள்ளியைத் தாம் வழங்கியதாகவும் எனினும், தன் தம்பி
விடுவிக்கப்படாததைத் தொடர்ந்து இது குறித்து தாம் போலீசில் புகார்
செய்ததாகவும் அப்பெண் கூறியிருந்தார்.




