கோலாலம்பூர், பிப் 7- சீனப்புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும்
வியாழக்கிழமை தொடங்கி பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச்
செல்லவிருப்பதை முன்னிட்டு சாலைகளில் பாதுகாப்பை உறுதி
செய்வதற்காக 6,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் பணியில்
ஈடுபடுவர்.
இந்த பெருநாளை முன்னிட்டு ஓப் செலாமாட் இயக்கம் இம்மாதம் 8
முதல் 21 வரை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் நெடுஞ்சாலைகளில்
உள்ள போக்குவரத்து நெரிசல்மிக்க மற்றும் விபத்துகள் அதிகம் நிகழும் 64
அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் புக்கிட் அமான் சாலைப் போக்குவரத்து
விசாரணை மற்றும் அமலாக்கத் துறை கூறியது.
சாலைகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 6,559
அதிகாரிகளைத் தாங்கள் பணியில் அமர்த்தியுள்ளதாகக் கூறிய அதன்
இயக்குநர் டத்தோ முகமது அஸ்மான் அகமது சப்ரி, ஓப் செலாமாட்
இயக்கம் சீராக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய அனைவரின்
விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
நீண்ட பெருநாள் விடுமுறையின் போது ஆளில்லா வீடுகளில் திருட்டுச்
சம்பவங்கள் நிகழ்வதைத் தடுப்பதற்கு மோட்டார் சைக்கிள் ரோந்து
நடவடிக்கைகள் வாயிலாக ஓப் செலாமாட் இயக்கம் மேலும்
வலுப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
பெருநாள் காலத்தின் பொது குறிப்பாகச் சொந்த ஊர்களிலிருந்து வீடு
திரும்பும் போது அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் சாலையைப்
பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
ஆர்.டி.எம். தொலைக்காட்சியில் இன்று காலை ஒளிபரப்பான செலாமாட்
பாகி மலேசியா நிகழ்வில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்ட போது
அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகம்
நிகழக்கூடிய 547 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர்
மேலும் சொன்னார்.




