கோலாலம்பூர், பிப் 6 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.)
கடந்தாண்டு நவம்பர் மாதம் முடக்கப்பட்ட 11 வங்கிக் கணக்குகள்
தொடர்பில் அமான் பாலஸ்தீன் பெர்ஹாட் செய்துள்ள நீதித் துறை
சீராய்வு மனு ஏற்றுக்கொள்ளப்படுவதை சட்டத் துறைத் தலைவர்
அலுவலகம் (ஏ.ஜி.சி.) ஆட்சேபித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அமார்ஜிட் சிங் முன்னிலையில் இந்த
வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சட்டத் துறைத் தலைவர்
அலுவலகத்தைப் பிரதிநிதிக்கும் தலைமை கூட்டரசு வழக்கறிஞர் நுர்
இர்மாவதி டாவுட் இந்த ஆட்சேபத்தை முன்வைத்தார்.
இந்த விசாரணையின் போது அமான் பாலஸ்தீன் பெர்ஹாட்டை
பிரதிநிதித்து வழக்கறிஞர் முகமது ராபிக் ரஷிட் அலி ஆஜரானார்.
இந்த வழக்கில் தனது கட்சிக்காரரின் தரப்பு வாதத்தை முன் வைத்த
வழக்கறிஞர் ராபிக், காஸா நெருக்கடியில் சிக்கியுள்ள பாலஸ்தீன
மக்களுக்கு உடனடியாக உதவிப் பொருள்களை அனுப்ப வேண்டியுள்ளதால்
இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தைக்
கேட்டுக் கொண்டார்.
இரு தரப்பும் தங்களின் வாதத் தொகுப்பைத் தாக்கல் செய்ய பிப்ரவரி 13
மற்றும் 20ஆம் தேதிகளை நிர்ணயம் செய்த நீதிபதி, இந்த சீராய்வு மனு
மீதான விசாரணையை எதிர்வரும் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
எம்.ஏ.சி.சி. தலைம ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி உள்பட ஏழு
தரப்பினரை பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிட்டு இந்த சீராய்வு மனுவை
அமான் பாலஸ்தீன் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தாக்கல் செய்தது.
அன்றாடச் செலவினம், ஊழியர்கள் சம்பளம், நிர்வாகச் செலவினம் மற்றும் நடவடிக்கைச் செலவினம் ஆகியவற்றுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக எம்.ஏ.சி.சி.யினால் முடக்கப்பட்டிருக்கும் அமான் பாலஸ்தீன் பெர்ஹாட்டிற்குச் சொந்தமான 1 கோடியே 10 லட்சத்து 26 ஆயிரத்து 215 வெள்ளி 60 காசுத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்த சீராய்வு மனுவில் அந்த அமைப்பு கோரியுள்ளது.




