புத்ரா ஜெயா, பிப் 6 - சிறப்பான பொருளாதார மேலாண்மையை உறுதி செய்வதற்கும் வீண் விரயங்களை தடுப்பதற்கும் ஏதுவாக நாட்டின் நிலையை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு உள்நாட்டு கொள்கைகள் இன்றியமையாதவையாக விளங்குகின்றன என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
வீண் விரயங்களை தவிர்த்து மேம்பாட்டுப் பணிகளை விரைவு படுத்துவதற்கு வழி வகுக்கும் வகையில் சிறப்பான நிர்வாகம் மற்றும் பொருளாதார மேலாண்மை மீது முழு கவனத்தையும் செலுத்துவதற்கு அரசாங்கத்திற்கு குறிப்பாக நிதியமைச்சுக்கு இந்த உள்நாட்டு கொள்கை அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த குறிக்கோளிலிருந்து நிதியமைச்சின் பணியாளர்களாகிய நம்மால் விலகி ஓட முடியாது. அந்த குறிக்கோள் மீது முழு கவனத்தையும் செலுத்தியாக வேண்டும் என்று நிதியமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.
வீண் விரயங்களைத் தவிர்ப்பதற்கும் அரசு நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் சம்பள மறு ஆய்வு உள்பட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அமல்படுத்த முடியும் என்றார் அவர்.
இதன் மூலம் புதிய நம்பிக்கையையும் மக்களுக்கான சமூக நலத் திட்டங்களுக்கு அங்கீகாரத்தையும் பெற இயலும் என அவர் கூறினார்.
நாட்டின் கடன் 1.2 ட்ரிலியன் வெள்ளியாக அதிகரித்துள்ள நிலையில் கடனை திரும்ப செலுத்துவதில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 65 விழுக்காடு பயன்படுத்தப்படுவதால், மடாணி அரசாங்கம் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக முன்னதாக கூறப்பட்டது.




