கோலாலம்பூர், பிப் 6 - இணையக் குற்றங்கள் மீதான புதிய சட்ட
மசோதாவை வரைவது தொடர்பான செயல்குழுவின் கூட்டம் நேற்று
நடைபெற்றது. இந்த செயல்குழுவுக்கு பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ
அஸாலினா ஓத்மான் ( சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தம்)
மற்றும் தொடர்பு அமைச்சர் பாஹ்மி பாட்சில் ஆகியோர் தலைமையேற்றனர்.
இணையக் குற்றங்களைக் கையாள்வதற்கு ஏதுவாக புதிய சட்டங்களை
வரைவதற்காக இந்த பரிந்துரை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அஸாலினா
தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நவீன இணைய உலகில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி
செய்வதில் மடாணி அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையை
இந்நடவடிக்கை புலப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.
இணையச் சேவைகள் தற்போது அத்தியாவசியமாகி விட்டதோடு நமது
அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகவும் ஆகிவிட்டது. இந்த
மேம்பாடு பல துறைகளில் குறிப்பாக வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகளை
உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை
சுலபமானதாகவும் சௌகர்யமானதாகவும் ஆகிவிட்டது என்று அவர்
குறிப்பிட்டார்.
இணைய உலகின் நன்மைகளை நாம் அனுபவித்து வரும் வேளையில் அதுவே இணையக்
குற்றங்களின் மையமாக மாறும் அளவுக்கு இது தவறாகப்
பயன்படுத்தப்படுகிறது. இத்தகையக் குற்றங்கள் பரவலாகப் பெருகி வரும்
அதேவேளையில் அபாயக்கட்டத்தையும் எட்டியுள்ளது என்று அவர்
தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பல்வேறு அமைச்சுகள், அரசு நிறுவனங்கள் மற்றும்
சம்பந்தப்பட்ட துறைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.




