கோலாலம்பூர், பிப் 6 - சீனப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை முதல் 13ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ள 21வது ஓப் செலாமாட் இயக்கத்தின் ஒரு பகுதியாகச் சிலாங்கூரிலுள்ள ஐந்து மாவட்டங்களில் ஓப் லஞ்சார் இயக்கத்தை மாநிலப் போலீஸ் துறை மேற்கொள்ளவுள்ளது.
கோம்பாக், கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர், செர்டாங், வட கிள்ளான் ஆகிய ஐந்து மாவட்டங்கள் இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையில் இடம் பெற்றுள்ளதாகச் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையின் கோம்பாக் டோல் சாவடி, கோலாம்பூர்-ஈப்போ சாலையின் 30வது கிலோ மீட்டர், கிள்ளான்-தெலுக் இந்தான் சாலையின் கோல சிலாங்கூர் முதல் தஞ்சோங் காராங் வரையிலானப் பகுதி, கோல சிலாங்கூர் முதல் ரவாங் வரையிலான பகுதியை இந்த சோதனை இலக்காகக் கொண்டிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, கோலாலம்பூர்-ஈப்போ சாலை, கிள்ளான்-தெலுக் இந்தான் சாலையின் பெக்கான் காப்பார், செர்டாங்கிலுள்ள சுங்கை பீசி டோல் சாவடி ஆகிய இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
மேலும் 11 இடங்களில் வேக கட்டுப்பாட்டு பொறிகளும் ஐந்து இடங்களில் ஓப் லஞ்சார் சோதனை இயக்கமும் மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர், இந்த ஆறு நாள் சோதனை நடவடிக்கையில் 61 அதிகாரிகளும் 432 காவல்துறை உறுப்பினர்களும் பங்கு பெறுவர் என்றார்.
தங்கள் வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வது, சாலையில் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிப்பது, வாகனம் ஓட்டும் போது கைப்பேசியைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது ஆகியவை பொறுப்புள்ள வாகமோட்டிகள் என்ற முறையில் அனைவரின் கடமையாகும் எனவும் அவர் நினைவுபடுத்தினார்.




