சிரம்பான், பிப் 3- அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என்ற ஆசை வார்த்தையை நம்பி மூதாட்டி ஒருவர் போலி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி 178,000 வெள்ளியை இழந்தார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து குறுஞ் செய்தியை சுமார் 70 வயது மதிக்கத்தக்க அந்த மூதாட்டி பெற்றதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹஷிம் கூறினார்.
தன்னை பிரபலமான கொடை நெஞ்சர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த அனாமேதேய நபர் ‘நேவிகேப்‘ எனும் முதலீட்டுத் திட்டத்தில் பங்கேற்பதற்கு அந்த மூதாட்டிக்கு அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து அந்த மூதாட்டி இரு பரிவர்த்தனைகள் மூலம் அந்த நபர் கொடுத்த இரு வங்கிக் கணக்குகளில் 178,000 வெள்ளியை சேர்த்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
தனது கணக்கு முடக்கப்பட்டு விட்டதாகக் கூறி முதலீட்டின் மூலம் கிடைத்த லாபத் தொகை வழங்கப்படாததைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை அந்த மூதாட்டி உணர்ந்துள்ளார் என அவர் சொன்னார்.
இந்த மோசடித் தொடர்பில் அந்த மூதாட்டி நேற்று காலை போலீசில் புகார் செய்துள்ளார் என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த புகார் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420 பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு சந்தேகப் பேர்வழியை அடையாளம் காணும் முயற்சியிலும் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.








