கோலாலம்பூர், பிப் 2- தங்களின் சம்பளம் மற்றும் பதவிக்கு ஏற்ப
அல்லாமல் ஆடம்பரமாக வாழும் போலீஸ் அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகப்
பிரிவினரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும்படி மாவட்ட போலீஸ்
தலைவர்களைத் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின்
ஹூசேன் பணித்துள்ளார்.
தங்கள் வருமானத்திற்கு மீறி ஆடம்பரமாக வாழும் அதிகாரிகள் அல்லது
உறுப்பினர்களை புக்கிட் அமான் அடையாளம் கண்டால் மாவட்ட போலீஸ்
தலைவர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
தங்கள் அதிகாரிகள் அல்லது உறுப்பினர்கள் வருமானத்திற்கு அப்பாற்பட்டு
ஆடம்பர வாழ்க்கை வாழ்வதை அறியாத அல்லது தெரிந்தும் தெரியாது
போலிருக்கும் மாவட்ட போலீஸ் தலைவர்கள் வெளியேறும்படி (காவல்
துறையிலிருந்து விலகும்படி) கேட்டுக் கொள்ளப்படுவர் என்று அவர்
தெரிவித்தார்.
வருமானத்தையும் மீறி ஆடம்பரமாக வாழும் அதிகாரிகள் மற்றும்
உறுப்பினர்களுடன் (கையூட்டு வாங்குவது உள்ளிட்ட செயல்கள்) கூட்டாகச்
செயல்படும் பட்சத்தில் மாவட்ட போலீஸ் தலைவர்களாக இருப்பதற்கான
தகுதி அவர்களுக்கு இல்லை. ஆணையிடும் அதிகாரம் கொண்ட
பொறுப்பை வகிக்கும் தரமும் அவர்களுக்குக் கிடையாது என்றார் அவர்.
செராஸ், பி.டி.ஆர்.எம். பயிற்சிக் கழகத்தில் இன்று நடைபெற்ற தீபகற்ப
மலேசியாவிலுள்ள மாவட்ட போலீஸ் தலைவர்கள் மற்றும் அரச
மலேசிய போலீஸ் படையின் உயர் தலைமைத்துவ உறுப்பினர்களுடனான
சிறப்பு சந்திப்பின் போது அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
தவறுகள் நிகழ்வதைத் தடுப்பதற்கு ஏதுவாக தங்களுக்குக் கீழுள்ள அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் நடவடிக்கைளைக் கண்காணிக்கும் முக்கியப் பொறுப்பைக் கண்காணிப்பாளர்கள் கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.




