அலோர் ஸ்டார், பிப் 2: இன்று குருன் அருகே வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கி செல்லும் பாதையில் கிலோமீட்டர் 77.5 இல் மூன்று இராணுவ டிரக்குகள் உட்பட நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்ததாக குவார் செம்பா டாக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைமை உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் முகமட் பெளசி ரசாலி கூறினார்.
"காலை 10.22 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு வந்தது. அதனை தொடர்ந்து, பெண்டாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஆறு உறுப்பினர்களின் உதவியுடன் குவார் செம்படாக் உறுப்பினர்களின் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.
"இராணுவ டிரக்குகளில் ஒன்று பழுதடைந்து நின்றதாக நம்பப்படுகிறது. அச்சமயம் டிராக்கிலிருந்து ராணுவ வீரர்கள் இறங்கிய போது, 31 வயதுடைய நபர் ஒருவர் ஓட்டிச் சென்ற லாரி அவர்களை மோதி கவிழ்ந்து," என்று அவர் கூறினார்.
லாரியின் ஓட்டுநர் பலத்த காயமடைந்ததால் சிகிச்சைக்காகச் சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், உயிரிழந்த மூன்று இராணுவ வீரர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறினார்.
– பெர்னாமா




