கோலாலம்பூர், ஜன 24 - அரச மலேசிய சுங்கத் துறை மேற்கொண்ட மூன்று
வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் 26 லட்சம் வெள்ளி மதிப்புள்ள
164,800 கிலோ எடையிலான உறையவைக்கப்பட்ட மாடு மற்றும் பன்றி
இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்தாண்டு டிசம்பர் 27 முதல் இவ்வாண்டு ஜனவரி 17 வரை
மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைளில் இந்த இறைச்சி பறிமுதல்
செய்யப்பட்டதாகச் சுங்கத் துறையின் மத்திய பிராந்தியத்திற்கான உதவி
இயக்குநர் நோர்லேலா இஸ்மாயில் கூறினார்.
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அண்டை
நாட்டிலிருந்து வடகிள்ளான் துறைமுகம் வழியாக நாட்டிற்குள் கொண்டு
வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உறைய வைக்கப்பட்ட மாட்டிறைச்சி
பறிமுதல் செய்யப்பட்டது என்று அவர் சொன்னார்.
துறைமுகத்திலிருந்த இரு கொள்கலன்களைச் சோதனையிட்டதில் 840,000
வெள்ளி மதிப்பிலான 56,000 கிலோ இறைச்சி அதில் வைக்கப்பட்டுள்ளது
கண்டறியப்பட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இரண்டாவது சோதனை நடவடிக்கையின் போது இறக்குமதி லைசென்ஸ்
இன்றி நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 24,300 கிலோ உறைய
வைக்கப்பட்ட மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. போர்ட் கிள்ளான்
வெஸ்ட்போர்ட் துறைமுகத்திலிருந்து நாட்டின் தென் பகுதிக்கு அந்த இறைச்சி கொண்டுச் செல்லப்படவிருந்தது என்று அவர் மேலும் கூறினார்.
செமினி, சுங்கை லாலாங் சாலையில் உள்ள கிடங்கு ஒன்றில்
மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 15 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி
மதிப்புள்ள 85,500 கிலோ உறைய வைக்கப்பட்ட பன்றி இறைச்சி
கைப்பற்றப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மூன்று கொள்கலன்களைப் பறிமுதல் செய்து இரு மியன்மார்
பிரஜைகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் வரி செலுத்தப்படாத இந்த
இறைச்சிகள் கண்டு பிடிக்கப்பட்டன என்றார் அவர்.




