கோலாலம்பூர், ஜன. 22: மலேசியா மடாணி கருத்தை விளம்பரப் படுத்துவதில் அரசு ஊழியர்கள் தங்கள் பங்கை ஆற்றுவது முக்கியம் என்று பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் அபிடின் கூறினார்.
ஓராண்டுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கருத்து, சமூகம் மத்தியில் திருப்திகரமான புரிதலை எட்டவில்லை. அதனால், புரிந்துணர்வும் ஈடுபாடும் தேவை என்பதை வலியுறுத்தினார்.
“மடாணி கருத்து அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடம் ஆன போதிலும், அதன் அர்த்தத்தை சமூகத்தில் பரப்புவதற்கு இன்னும் விரிவான முயற்சி தேவை.
மடாணி அரசாங்கத்தின் இலட்சியங்களை நிலைநிறுத்துவதில் அரசாங்க ஊழியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது, ”என்று பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்களுக்கான சேவை என்ற ‘கிட்மாட் டெமி ரக்யாட்’ மலிவு விற்பனை திட்டத்தில் சந்தித்தபோது கூறினார்.
ஜனவரி 19, 2023 அன்று, உலக அரங்கில் நாட்டின் கண்ணியத்தையும் பெருமையையும் மீட்டெடுக்கும் முயற்சியில் அனைத்து குழுக்களையும் இனங்களையும் உள்ளடக்கிய ஒரு முயற்சியான மலேசியா மடாணி என்ற கருத்தை பிரதமர் அறிமுகப்படுத்தினார்.
மலேசியா மடாணி கட்டமைப்பானது, நிலைத்தன்மை, செழிப்பு, புதுமை, மரியாதை, நம்பிக்கை மற்றும் இரக்கம் ஆகிய ஆறு அம்சங்கள் மூலம் ஒரு சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்புவதில் நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதற்கான செயல்முறையில் கவனம் செலுத்துகிறது.
இதற்கிடையில், மலேசியா மடாணி கருத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதில், அனைத்துத் மலேசியர்களும், அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் பங்கேற்பார்கள் என்று பார்ட்டி கெஅடிலான் ரக்யாட் (கெடிலான்) துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வர் நம்பிக்கை தெரிவித்தார்.
”மடாணி மலேசியாவை இன்னும் உயர்த்த வேண்டும். மேலும் ஒவ்வொரு குடிமகனும் நம் நாட்டின் சிறப்பை விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். சந்தேகத்திற்கு இடமின்றி, மடாணி கருத்தை அடைவதற்கு அனைவரின் கூட்டு ஈடுபாடு தேவை,” என்று அவர் கூறினார்.
- பெர்னாமா




