கோலாலம்பூர், ஜன 22: இன்று தொடங்கி சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா (சாரா) மானியத் திட்டம் மீண்டும் கட்ட கட்டமாக விநியோகிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
சாரா திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது அதாவது கடந்த ஆண்டு RM13 கோடி செலவழித்ததை விட இவ்வாண்டு ஐந்து மடங்கு அதிகமாக (RM70கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பிரதமர் தனது முகநூலில் தெரிவித்தார்.
இந்த பெரிய ஒதுக்கீடு, கடந்த ஆண்டு 210,000 ஆக இருந்த சாரா பெறுபவர்களின் எண்ணிக்கையை 700,000 ஆக அதிகரிக்கும் என்றார்.
"உதவித் தொகையும் RM1,200 ஆக உயர்த்தப்பட்டது, இது கடந்த ஆண்டு வழங்கலை விட இரட்டிப்பாகும்" என்று பிரதமர் கூறினார்.
மலேசியாவின் பொருளாதாரத்தின் மாற்றம் மக்களின் நிலையை உயர்த்துவதில் இருந்து தொடங்குகிறது. எனவே சாரா திட்டத்தின் முன்னேற்றம் செல்வ இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கு, மடாணி பொருளாதாரத்தின் கட்டமைப்பிற்குள் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு முதல் படியாகும் என்றார் பிரதமர்.
நாட்டின் வாழ்க்கை செலவினங்களுக்கு ஏற்ப பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் சமத்துவக் கொள்கையை நிலை நிறுத்துவதற்கும் பிற உதவிகளுக்கு மேலும் மேம்பாடுகளை அரசாங்கம் அறிவிக்கும் என்று அவர் கூறினார்.
- பெர்னாமா




