ஷா ஆலம், ஜன 19 - குடிநீர் கட்டண உயர்வின் மூலம் பழைய குழாய்களை மாற்றும் பணியை இரட்டிப்பாக்கி குழாய் உடைவது மற்றும் நீர் கசிவு போன்ற பிரச்சனைகளைப் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தீர்ப்பதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.
தற்போது ஆண்டுக்கு 150 கிலோ மீட்டராக இருக்கும் பழைய குழாய்களை மாற்றும் பணி, புதிய குடிநீர் கட்டண சீரமைப்பின் வாயிலாக 300 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க இயலும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாகக் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படுவதாகக் கூறிய அவர், புதிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதன் மூலம் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுவாக்கில் உபரி குடிநீர்க் கையிருப்பை 20 விழுக்காடாக உயர்த்த முடியும் என அவர் சொன்னார்.
புதிய குழாய்களை பொருத்துவது உள்ளிட்ட பராமரிப்பு மற்றும் தரம் உயர்த்தும் பணிகளை இரடிப்பாக்குவதற்கும் நீர் அழுத்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் இந்த கட்டண உயர்வு பெரிதும் துணை புரியும் என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
குடிநீர்க் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது. தீபகற்ப மலேசியா மற்றும் லபுவானில் எதிர்வரும் பிப்ரவரி முதல் தேதி தொடங்கி அமல்படுத்தப்படவிருக்கும் இந்த கட்டண உயர்வு ஒரு கன மீட்டருக்கு 22 காசை உட்படுத்தி இருக்கும் என அது தெரிவித்தது.
சுகாதார அமைச்சின் தர நிர்ணய திற்கேற்ப நீரின் தரத்தை உயர்த்தி 99 விழுக்காடாக நிலை நிறுத்த இயலும் என அமிருடின் குறிப்பிட்டார்.
ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வாயிலாகச் சேவைத் தரம் மேம்படுத்தப்படுவது மற்றும் அந்நிறுவனத்தின் செயலி தரம் உயர்த்தப்படுவது போன்றவற்றை மாநில அரச தொடர்ந்து கண்காணித்து வரும் என அவர் சொன்னார்.