கோல திரங்கானு, ஜன.18 - கோல திரங்கானு நீதிமன்ற வளாகத்தின் வேலிக்கு முன்புறம் வைக்கப்பட்டிருந்த மர்மப் பொட்டலம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
அந்த மர்மப் பொட்டலம் தொடர்பில் காலை 7.30 மணியளவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்களிடமிருந்து தங்களுக்குப் புகார் கிடைத்ததாகத் திரங்கானு மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ மஸ்லி மஸ்லான் கூறினார்.
இப்புகாரைத் தொடர்ந்து கோல திரங்கானு மாவட்ட காவல்துறை தலைமையகக் குற்றப் புலனாய்வுக் குழு மற்றும் திரங்கானு மாநிலப் போலீஸ் தலைமையகத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்தன என்று அவர் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தை ஆய்வு செய்த போது ஏ4 காகிதத்தில் சுற்றப்பட்ட பேட்டரியுடன் கூடிய பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனுள் டார்ச் விளக்கு துண்டுகள் இருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது கூறினார்.
நேற்றிரவு அந்த இடத்தில் வைக்கப்பட்டதாக நம்பப்படும் அந்தப் பொருளை அழிக்க தாங்கள் நடவடிக்கை எடுத்ததாகக் கூறிய அவர், எனினும், அதில் வெடிக்கும் கூறுகள் ஏதும் இல்லை என்பது பின்னர் கண்டறியப்பட்டது என்றார்.
விரிவான சோதனைக்காக அப்பொருட்கள் திரங்கானு போலீஸ் தலைமையகத்தின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்ட வேளையில் அந்த வளாகம் முழுவதும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்றார் அவர்.
குற்றவியல் அச்சுறுத்தல் தொடர்பில் குற்றவியல் சட்டப் பிரிவு 506இன் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்படுகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.








