கோலாலம்பூர், ஜன 18 - இவ்வாண்டு தைப்பூச திருவிழா எல்லாவகையிலும் பக்தி நெறியுடன் நடைபெறுவதை தைப்பூச நடவடிக்கை குழு உறுதிப்படுத்தும்.
பத்துமலையில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் நடைபெறும் தைப்பூச திருவிழா பாதுகாப்புடனும் பக்தி நெறியுடன் நடைபெறுவதற்குத் தமது தலைமையிலான தைப்பூச நடவடிக்கை குழு அனைத்து தரப்புக்களுடன் இணைந்து ஒத்துழைக்கும் என அதன் தலைவரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜி குணராஜ் தெரிவித்தார்.
பத்துமலை தைப்பூச விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையிலான ஸ்ரீ மாரியம்மன் தேவஸ்தானம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தாலும் பத்துமலை திருத்தலத்தில் கூடும் லட்சக்கணக்கான மற்றும் ரதம் ஊர்வலத்தில் பங்கேற்கும் பக்தர்களின் கட்டொழுங்கும் அவர்கள் நடந்துகொள்ளும் போக்கையும் அனைத்து தரப்பினரும் கவனிக்கின்றனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என குணராஜ் வலியுறுத்தினார்.
பத்துமலையில் மட்டுமின்றி நாடு முழுவதிலும் தைப்பூச திருவிழா நடைபெறும் இதர இடங்களிலும் பக்தர்களின் ஒற்றுமையும் கட்டுப் கோப்பும் பொது ஒழுங்கும் மிகவும் முக்கியம் என குணராஜ் தெரிவித்தார்.
பல்வேறு அரசு சார்பற்ற இயக்கங்களின் உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ள தைப்பூச நடவடிக்கை குழுவின் உறுப்பினர்கள் இதர மாநிலங்களிலும் இருப்பதால் அவர்கள் தங்களது பணியை ஆற்றி வருவார்கள் என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு தைப்பூசமும் எல்லா வகையிலும் சிறப்பாக நடைபெறுவதற்குத் தைப்பூச நடவடிக்கை குழு முழுமையாக ஒத்துழைக்கும்.
பத்துமலை திருத்தலத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மது பானங்கள் விற்கக்கூடாது என்பதை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை குழுவுடன் போலீஸ் படையினர் மிகவும் அணுக்கமாகச் செயல்படுவார்கள்.
மேலும் கார் நிறுத்தும் பொது இடங்களில் கார் நிறுத்துவோரிடம் பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்துவதை உறுதிப்படுத்தும்படியும் போலீசைத் தாங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் குணராஜ் சொன்னார்.
குறிப்பாகப் பத்துமலை தைப்பூச விழாவின் போது மதுபான விற்பனை, போக்குவரத்து நெரிசல், குப்பைகள் அகற்றுவது, மோட்டார் சைக்கிள்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது என ஒரு சில விவகாரங்கள் நிலவி வருகிறது. இப்பிரச்சனை குறித்து கோம்பாக் மாவட்ட போலீஸ்படை, செலாயாங் நகராண்மைக் கழகம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று குணராஜ் கூறினார்.




