கோலாலம்பூர், ஜன 18 - ‘கிக்‘ எனப்படும் தற்காலிகமாக அல்லது பகுதி
நேரமாக பொருளீட்டும் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் நலன் காக்க
ஒழுங்கு முறை அமைப்பை அரசாங்கம் விரைந்து அமைக்க வேண்டும்
என்று மலேசிய விநியோகிப்பாளர் சகாக்கள் ஒற்றுமைச் சங்கம்
வலியுறுத்தியுள்ளது.
கிக் பொருளாதாரத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பாக உணவு
விநியோகிப்பாளர்களின் நலன் காக்கப்படுவதை உறுதி செய்ய இத்தகைய
ஒழுங்கு முறை அமைப்பு அவசியம் என்று அச்சங்கம் கூறியது.
அதே சமயம் தற்போது உணவு விநியோகிப்பாளர்கள் எதிர்நோக்கும்
ஊதியக் குறைப்பு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக குறுகிய
கால நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் அது
கேட்டுக் கொண்டது.
பி-ஹெய்லிங் எனப்படும் உணவு விநியோகச் சேவை தொடர்பான
பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இவ்விவகாரத்தில்
அரசாங்கம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
‘கிக்‘ பொருளாதாரச் சூழலின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய
வழிகாட்டியை வரைந்து அதனை அமல்படுத்தும் ஆற்றல் அரசாங்கத்திற்கு
மட்டுமே உள்ளது. ஆகவே இவ்விவகாரத்தில் அரசாங்கம் தலையிட
வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று அச்சங்கம் அறிக்கை
ஒன்றில் கூறியது.
உணவு விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள மோட்டார்
சைக்கிளோட்டிகளுக்குப் பழைய சேவைக் கட்டண முறையை கிராப்ஃபூட்
மலேசியா விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதோடு பெரும்
வருமானப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள புதிய கட்டண முறையை ரத்து
செய்ய வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.
உணவுப் பட்டுவாடாத் தொழிலில் ஈடுபட்டுள்ள மோட்டார்
சைக்கிளோட்டிகளுடன் கலந்தாலோசிக்காமல் அவசர நிலையில் கிராப்ஃபூட்
நிறுவனம் இந்த கட்டணக் குறைப்பை அமல்படுத்தியுள்ளது எனவும்
அச்சங்கம் குற்றஞ்சாட்டியது.




