கோலாலம்பூர், ஜன 18 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று
மாநிலங்களில் வெள்ள நிலைமையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.
இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி அந்த மூன்று மாநிலங்களிலும்
உள்ள ஏழு துயர் துடைப்பு மையங்களில் 289 பேர் தங்கியுள்ளனர்.
ஜொகூர் மாநிலத்தின் சிகாமாட் மாவட்டத்தில் இரு நிவாரண
மையங்களும் பத்து பகாட்டில் ஒரு மையமும் தொடர்ந்து செயல்படும்
வேளையில் இங்கு 22 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளதாக நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை
மையத்தின் தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட சமீபத்திய
அறிக்கை கூறியது.
பகாங்கில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் இன்னும் துயர் துடைப்பு
மையங்களில் தங்கியுள்ளனர். ரொம்பின் மாவட்டத்திலுள்ள இரு துயர்
துடைப்பு மையங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சபா
மாநிலத்தின் பெலுரானில் உள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் 42
குடும்பங்களைச் சேர்ந்த 99 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.
ஐந்து மாநிலங்களில் உள்ள ஆறு ஆறுகளில் நீர் மட்டம் அபாயக்
கட்டத்தில் உள்ளது என வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையின் டெலிமெட்ரி
நிலையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெள்ளம், மண் சரிவு மற்றும் பாலம் உடைந்தது போன்ற காரணங்களால்
நாடு முழுவதும் உள்ள 17 சாலைகள் வாகனப் போக்குவரத்துக்கு
மூடப்பட்டுள்ளன.
இதனிடையே, சரவா மாநிலத்தின் கூச்சிங்கில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட
12 குடும்பங்களைச் சேரந்த 38 பேர் தொடர்ந்து தற்காலிக நிவாரண
மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.




