கோலாலம்பூர், ஜன 18 - தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதற்கு மீடியா பிரிமா செய்திப் பிரிவு விடுத்த பிரத்தியேக அழைப்பை மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா மற்றும் மாட்சிமை தங்கிய பேரரசியார் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.
இந்த சிறப்பு அரச செய்தி டிவி 3 தொலைக்காட்சியில் நேற்றிரவு பிரத்தியேகமாக ஒளிபரப்பப்பட்டது இஸ்தானா நெகாரா வின் இண்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக அரச தம்பதியர் பண்டார் உத்தாமாவில் உள்ள டிவி 3 தலைமையகமான ஸ்ரீ பெந்தாஸூக்கு வருகை புரிந்தனர்.
இந்த வருகையின் போது அந்த தொலைக்காட்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாமன்னர் தம்பதியருக்கு விளக்கமளிக்கப்பட்டதோடு அவர்கள் பின்னர் பல்வேறு ஒளி, ஒலிபரப்பு அறைகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மேலும் அவர்கள் டிவி3, டிவி 9 மற்றும் 8 டிவி செய்தி வாசிப்பு ஸ்டியோக்கள் அமைந்துள்ள மீடியா பிரிமா செய்தி அறைக்கு வருகை புரிந்தனர்.
மான்னர் தம்பதியரை மீடியா பிரிமா குழுமத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சைட்ட ஹூசேன் அல்ஜூனிட், மீடியா பிரிமா குழுமத்தின் நிர்வாக அதிகாரி ராபிக் ரசாலி மற்றும் உயர் நிர்வாகப் பிரிவினர் வரவேற்றனர்.




