ஷா ஆலம், ஜன 15- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்தும் பணி 98 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஷா ஆலம் வட்டாரம் முழுவதும் உள்ள 46,000 சாலை விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் பணி இவ்வாண்டு பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இடைக்கால டத்தோ பண்டார் செரேமி தர்மான் கூறினார்.
ஷா ஆலம் வட்டாரம் முழுவதும் 46,000 சாலை விளக்குகள் உள்ளன. தெரு விளக்குகளை மாற்றும் திட்டத்தின் கீழ் அவற்றில் 98 விழுக்காட்டு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றி விட்டோம் என்று அவர் தெரிவித்தார்.
சாலை விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தின் வாயிலாக மின் கட்டணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் 1 கோடியே 30 லட்சம் வெள்ளியாக இருந்த மின் கட்டணம் கடந்த 2022ஆம் ஆண்டில் 57 லட்சம் வெள்ளியாக குறைந்துள்ளது என்றார் அவர்.
இந்த திட்டத்தின் வாயிலாக மின்சாரக் கட்டணத்தை மட்டுமின்றி கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்க முடிந்துள்ளது. முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் இலக்கிகேற்பவும் இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
ஷா ஆலம் மாநகர் மன்ற ஏற்பாட்டில் நேற்று இங்கு நடைபெற்ற வாகனமில்லா தின நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். இவ்வாண்டின் முதல் நிகழ்வான இதில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.








