ஜொகூர் பாரு, ஜன 10- இணைய மோசடியில் சிக்கி 75 வயது முதியவர்
தனது சேமிப்புத் தொகையான 540,047 வெள்ளியை இழந்தார்.
தமக்கெதிராக குற்றப்பதிவு உள்ளதாகப் போலீஸ் அதிகாரி எனக் கூறிக்
கொண்ட அனாமதேய நபரின் மிரட்டலை நம்பியதன் விளைவாக
அவ்வாடவர் இத்தொகையை இழந்துள்ளார்.
ஓய்வு பெற்ற தனியார் துறை ஊழியரான அந்த முதியவர் கடந்த நவம்பர்
மாதம் வாட்ஸ்ஆப் மூலம் ஆடவர் ஒருவரிடமிருந்து அழைப்பை
பெற்றதாக ஜொகூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ கமாருள் ஸமான்
மாமாட் கூறினார்.
அந்த அழைப்பு பின்னர் போலீஸ்காரர் எனக் கூறிக்கொண்ட நபருக்கு
மாற்றிவிடப்பட்டதாகக் கூறிய அவர், அந்த போலீஸ்காரர் “உங்களுக்கு
எதிராக குற்றப்பதிவு உள்ளது“ என்று அந்த முதியவரை மிரட்டியுள்ளார்
என்றார்.
பின்னர் அந்த அழைப்பு உயர் போலீஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்ட
மற்றொரு நபருக்கு மாற்றிவிடப்பட்டது. அந்த அதிகாரி அந்த
முதியவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவித்துள்ளார்.
பின்னர் இணையம் வாயிலாகப் புகார் செய்யும்படி அந்த முதியவருக்கு
ஆலோசனை கூறப்பட்டுள்ளது. பயத்தில் உறைந்து போன அந்த முதியவர்
அச்சந்தேகப் பேர்வழி சொன்னபடி இந்த வழக்கைத் தீர்ப்பதற்காகத் தனது
வங்கிக் கணக்கிலிருந்த 543,000 வெள்ளியை எடுத்து தனக்குச் சொந்தமான
மற்றொரு வங்கிக் கணக்கில் சேர்த்துள்ளார்.
அதன் பிறகு அந்த வங்கி ஏ.டி.எம். கார்டு மற்றும் கடவு எண்
ஆகியவற்றை சந்தேக நபர் குறிப்பிட்ட இடத்தில் அந்த முதியவர்
வைத்துள்ளார் என்று டத்தோ கமாருள் ஸமான் தெரிவித்தார்.
இம்மாதத் தொடக்கத்தில் தனது வங்கிக் கணக்கை சோதனையிட்ட அந்த
முதியவர் தனது சேமிப்பிலிருநத 540,047.97 வெள்ளித் தொகை பலரது
வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்
எனக் கூறினார்.




