கோலாலம்பூர், ஜன 10 - ஊழியர் சேம நிதி வாரியத்தில் (இ.பி.எஃப்.)
உறுப்பியம் பெற்றுள்ள 40 முதல் 55 வயது வரையிலான 14 லட்சம்
பேருக்குக் கூடுதல் சந்தா தொகையாக 70 கோடியே 80 லட்சம் வெள்ளியை
அரசாங்கம் செலுத்தியுள்ளது.
கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில்
இ.பி.எஃப். முதலாவது சேமிப்புக் கணக்கில் 10,000 வெள்ளிக்கும் குறைவான
தொகையை வைத்துள்ளவர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கும்
நோக்கில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அந்த வாரியம் கூறியது.
இந்த 500 வெள்ளி ஊக்கத் தொகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்.
கடந்தாண்டு பிப்ரவரி 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2023ஆம்
ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஊக்கத் தொகை
தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இ.பி.எஃப். சேமிப்பில் குறைவானத் தொகையை வைத்திருக்கும் ஓய்வு
வயதை எட்டக்கூடிய உறுப்பினர்கள் தங்களின் சேமிப்பை அதிகரிப்பதற்கு
உதவும் நோக்கில் இந்த திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது.
சேமிப்புத் திறனை அதிகரிப்பதற்கும் நிதி ஆற்றல் மிக்க எதிர்காலத்தை
உருவாக்குவதற்கும ஏதுவாக கணிசமான பங்களிப்பை வழங்குவதை
உறுதி செய்வதற்கும் இ.பி.எஃப். வகுத்துள்ள இலக்குக்கு ஏற்ப இந்த திட்டம்
அமைந்துள்ளது.




