கிள்ளான், ஜன 10 - கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் புத்ரா ஜெயாவில் நீர்
விநியோகப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் மாநில அரசினால்
உருவாக்கப்பட்ட கச்சா நீர் உத்தரவாதத் திட்டம் (எஸ்.ஜே.ஏ.எம்.) வரும்
மே மாதம் முழுமையாக அமலுக்கு வரும்.
சுங்கை சிலாங்கூர், சுங்கை ரந்தாவ் பாஞ்சாங், சுங்கை செமினி ஆகிய
ஆறுகளை தடம் மாற்றும் பணி தற்போது தீவிரமாக மேற்கொள்ள்ளப்பட்டு
வருவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
மாசுபாடு ஏற்படும் பட்சத்தில் நீரை வழிமாற்றக்கூடிய இந்த 32 கோடி
வெள்ளி திட்டம் கடந்த 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு தற்போது
முழுமையடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுங்கை சிலாங்கூரில் பம்ப் ஹவுஸ் எனப்படும் நீர் இறைப்பு இயந்திர
நிலையத்தின் கட்டுமானம் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படும்
வேளையில் இந்த திட்டம் முழுவதும் மே மாதவாக்கில் பூர்த்தியடைந்து
விடும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நீர் உத்தரவாதத் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கடந்தாண்டு தொடக்கி வைத்தார். பம்ப் ஹவுஸ், நீர் சேகரிப்பு குள
நிர்மாணிப்பு மற்றும் ஆற்றின் வழித்தடத்தை மாற்றுவது ஆகியவை
உள்ளட நான்கு கட்ட நிர்மாணிப்பை இத்திட்டம் உள்ளக்கியுள்ளது.
இந்த திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய மாநில
அரசு 32 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. நீர் மாசுபாடு ஏற்படும்
பட்சத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி
செய்வதற்காகப் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட 10 கோடி வெள்ளியும் இதில்
அடங்கும்.
லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரிய சட்டத்தில் திருத்தம்
செய்வது, விரைவுப் பணிக் குழுக்களின் கண்காணிப்பு உள்ளிட்ட
நடவடிக்கைகளையும் இத்திட்டம் உள்ளக்கியுள்ளது.




