கோலாலம்பூர், ஜன. 10 - மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜே.பி பி.எம்.) துணை இயக்குநர் (நடவடிக்கைப் பிரிவு) டத்தோ நோர் ஹிஷாம் முகமது அத்துறையின் புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் வஹாப் மாட் யாசின் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அப்பொறுப்புக்கு நோர் ஹிஷாம் நியமிக்கப்பட்டதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு தெரிவித்தது.
நேற்று இங்கு நடைபெற்ற நோர் ஹிஷாமின் பதவி நியமன நிகழ்வில் அமைச்சர் ங்கா கோர் மிங், துணையமைச்சர் டத்தோ அய்மான் அதிரா சாபு மற்றும் அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ முகமது நூர் அஸ்மான் தாயிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நோர் ஹிஷாமின் நியமனத்திற்கு வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறது. மேலும், தீயணைப்புத் துறையை மென்மேலும் உயர்த்தும் முயற்சிகளை ஆதரிக்கவும் மக்களுக்கு திறமையான சேவையை வழங்குவதை உறுதி செய்யவும் அமைச்சு உறுதிபூண்டுள்ளது என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நோர் ஹிஷாம் கடந்த 1972ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி பேராக் மாநிலத்தின் பஞ்சோரில் பிறந்தார். பகாங்கில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற அவர், மலாயா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்ந்தார். 1996 இல் பட்டம் பெற்றப் பின்னர்1997ஆம் ஆண்டு தீயணைப்புத் துறையில் சேர்ந்தார்.




