கோத்தா பாரு, ஜன 9 - வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்கள்,
விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்போருக்கு உதவ விவசாயம்
மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு 5 கோடி வெள்ளியை ஒதுக்கீடு
செய்துள்ளது.
அமைச்சின் வேளாண் பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட
இத்தொகை அந்த இயற்கைப் பேரிடரில் அத்தரப்பினருக்கு ஏற்பட்ட
இழப்பில் 50 விழுக்காடு வரை ஈடு செய்ய உதவும் என்று விவசாய
மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.
வெள்ளப் பேரிடரில் கிளந்தான் மாநிலத்தில் உணவு தொழில் துறையைச்
சேர்ந்த 1,875 பேருக்கு 2 கோடி வெள்ளி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதை
தொடக்கக் கட்ட அறிக்கை கூறுவதாக அவர் சொன்னார்.
தும்பாட், கோத்தா பாரு, பாசீர் மாஸ், பாச்சோக், தானா மேரா, பாசீர்
பூத்தே, மாச்சாங், ஜெலி, கோல கிராய் மற்றும் குவா மூசாங் ஆகியவை
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும் என அவர்
தெரிவித்தார்.
இன்று இங்கு நடைபெற்ற செந்தோஹான் அக்ரோ மடாணி நிகழ்வில்
கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இந்த நிகழ்வில் அக்ரோ வங்கியின் தலைவரும் தலைமைச் செயல்முறை
அதிகாரியுமான டத்தோ தெங்கு அகமது பட்லி ஷா ராஜா ஹூசேனும்
கலந்து கொண்டார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 200 விவசாயிகள்,
மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு அவர் இந்நிகழ்வின் போது
அவர் உணவுக் கூடைகளை வழங்கினார்.
நாட்டில் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தித் துறைக்கு பங்காற்றி வரும்
தரப்பினர் இழப்பிலிருந்து மீண்டு வருவதற்கு ஏதுவாக அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குவது அவசியமாகும் என்றும் மாட் சாபு மேலும் சொன்னார்.




